கூடா நட்பு ஆபத்தை தரும் !!




கூடா நட்பு ஆபத்தை தரும் !!

ஒரு அடர்ந்த காட்டில் பல விலங்குகள் இருந்தன. அந்த காட்டில் வசித்து வந்த நரியும், கழுதையும் நண்பர்களாகினர். இரண்டும் சேர்ந்து ஒரு உடன்படிக்கை செய்து கொண்டன. அந்த உடன்படிக்கையில் தினமும் இரைத்தேட இருவரும் ஒன்றாகவே சேர்ந்து செல்ல வேண்டும் என்றும், அடுத்ததாக இருவரில் யாருக்கு என்ன ஆபத்து ஏற்பட்டாலும், மற்றொருவர் ஆபத்தை விலக்கப் போராடுவது என்றும் அந்த ஒப்பந்தத்தின் மூலம் இரண்டும் உறுதி செய்து கொண்டது.


ஒருநாள் நரி இரைத் தேடுவதற்காக தன் நண்பனான கழுதையையும் அழைத்துச் செல்வதற்காக கழுதையின் இருப்பிடத்தை நோக்கி அடர்ந்த காட்டிற்குள் சென்றது. நரி சென்று கொண்டிருந்த வழியில், காட்டின் ராஜாவான சிங்கம் ஒன்று அந்த நரியினை வழி மறித்தது. சிங்கத்தை பார்த்ததும் நரி பயத்தில் நடுங்கியது.


சிங்கத்திடம் சிக்கினால் உயிர் பிழைக்க முடியாது, எப்படியாவது தப்பிக்க வேண்டுமென என நரி யோசித்தது. நரி உடனே சிங்கத்திடம், காட்டின் ராஜாவே! எலும்பும் தோலுமாக இருக்கும் என்னைக் கடித்து உண்பதால் உங்கள் பசி கொஞ்சம் கூட குறையாது. அதனால் உங்களுக்கு நான் வேறு இரையைக் கொண்டு வருகிறேன் என்றது.


சிங்கம் எப்படி உன்னால் முடியும் எனக் கேட்டது. என்னுடைய நண்பனான, கழுதை ஒன்று இருக்கிறது. இரண்டு, மூன்று நாட்களுக்கு உங்கள் உணவுக்கு அந்தக் கழுதை போதுமானதாக இருக்கும் என்றும், சிரமமில்லாமல் நீங்கள் அதை பிடித்துக் கொள்வதற்கு நான் உங்களுக்கு உதவியாக இருப்பேன் என்றும் அந்த நரி கூறியது. 


நரி கூறியதை கேட்ட சிங்கம் ஒப்புக்கொண்டது. பின்னர் சிங்கத்தை ஓரிடத்தில் மறைவாக இருக்குமாறு கூறிவிட்டு கழுதையை அழைத்து வரச் சென்றது நரி.


கழுதையின் இருப்பிடத்திற்கு வந்த நரி கழுதையிடம் நண்பனே! இரைத்தேடச் செல்லலாமா? எனக் கேட்டது. பின் இரண்டும் காட்டிற்குள் வந்தன. நரி கழுதையை, சிங்கம் மறைந்திருக்கும் இடத்திற்கு அருகில் கொண்டு வந்து நிறுத்தியது. சிங்கம், வேகமாக கழுதையின் மீது பாய்ந்து அதைக் கொன்றது. உடனே நரியின் மீதும் பாய்ந்து அதையும் பிடித்துக் கொண்டது.


நரி பதட்டத்துடன், ராஜா! எனக்குப் பதிலாகத் தானே கழுதையை அழைத்து வந்தேன். ஆனால், இப்போது உங்களுக்கு உதவி செய்த என்னை ஏன் கொல்ல நினைக்கிறீர்கள்! என்று நடுக்கத்துடன் கேட்டது.


நெருக்கமான உன் நண்பனையே நீ காட்டிக் கொடுத்த உன்னை நம்ப முடியாது. இதேபோல் மற்றொரு நாள் நீ உயிர் பிழைப்பதற்காக என்னை விட பலம் வாய்ந்த வேறு விலங்கிடம் என்னைக் காட்டிக் கொடுக்க மாட்டாய் என்பதில் என்ன உறுதி இருக்கிறது. எனவே, உன்னை உயிருடன் விட்டு வைப்பது எதிரியை பக்கத்தில் வைத்திருப்பது போலதான் என்று கூறிக்கொண்டே சிங்கம் நரியைக் கொன்றது.


நீதி :


நட்பு என்பது புனிதமானது. புனிதமான நட்பிற்கு துரோகம் செய்தால் கடைசியில் தீமை தான் வந்து சேரும்.


 


கூடா நட்பு ஆபத்தை தரும் !! கூடா நட்பு ஆபத்தை தரும் !! Reviewed by ambrish on October 28, 2022 Rating: 5
Powered by Blogger.
|
📻 Install Seebatore FM App
Listen Tamil radio like a real app